Published : 03 Sep 2020 04:12 PM
Last Updated : 03 Sep 2020 04:12 PM

மணல் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்: நீதிபதிகள் கருத்து

மணல் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேவகோட்டை, கல்லங்குடி கிராமத்தில், பட்டா நிலத்தில் மண் அள்ள தனிநபருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மண் விவசாய பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டது எனவும் விதிகள் எதுவும் இல்லை என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அரசு தரப்பில் கூறியதை அடுத்து வழக்கை முடித்து வைத்தது மதுரைக்கிளை.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா அருகேயுள்ள கல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம், ராமசாமி, விசுவநாதன், கனகராஜ் உள்ளிட்டோர் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில்,"சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரன் கல்லங்குடி கிராமத்தில் கல்லங்குடி கண்மாய் உள்ளது. சுமார் 250 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த கண்மாய் மூலம் 300க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

அப்பகுதியில் உள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த கண்மாய் உள்ளது. விருசுளி ஆற்றில் இருந்து 3 நீர் வரத்து கால்வாய்கள் மூலமாக இந்த கண்மாய்க்கு நீர் வருகிறது.

இந்த நிலையில் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரும் தொட்டச்சி அம்மன் கோவில் கால்வாய் மற்றும் தொடுப்பூரணி கால்வாய் ஆகிய நீர்வரத்து கால்வாய்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது.

கனரக இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளி 50 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

கிராமத்தில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் உவரி மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று , அதை தவறாக பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

கனிமவள சட்டபடி தனிநபர்கள் மணல் குவாரி நடத்த கூடாது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனியார் நிலங்களில் மண் அள்ளவும் அனுமதி வழங்க கூடாது என தடை விதித்துள்ளது.

எனவே, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லங்குடி கிராமத்தில் பட்டா நிலத்தில் கிராவல் மண் எடுக்க தனிநபருக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில்," விவசாயப் பயன்பாட்டிற்காகவே மண் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது விதிமீறல் ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்," மணல் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x