இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது என இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலரின் பெயர், தொழில், சுய வருமானம், கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளின் ஞானம், கோயில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடாதவரா, அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக்கூடியவரா போன்ற விவரங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிட்டு, கோயில் அலுவலகங்களில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று (செப். 3) விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, ''கோயில் அறங்காவலர் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது? பொறுப்பில் இருப்பவர்களின் விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு உள்ளது? நிர்வாகிகளின் விவரங்களைக் கோயில் அறிவிப்புப் பலகையில் ஏன் வெளியிடக் கூடாது?'' எனத் தமிழக அரசுக்குக் கேள்விகள் எழுப்பினர்.

இதற்கு அரசுத் தரப்பில் விரிவான பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 17-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in