குமரி அரச ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்: அரசு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

குமரி அரச ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்: அரசு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Published on

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நாளை (4-ம் தேதி) கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் நடத்த இருந்த வேலைநிறுத்த போராட்டம், அரசு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டது.

குமரி அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் நிகார் ரஞ்சன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ரப்பர் கழக தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தையில் அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் வல்சகுமார், வேலப்பன் (சிஐடியு), அனந்தகிருஷ்ணன், ஸ்ரீகண்டன் (ஐ.என்.டி.யு.சி), ராஜேந்திரன் (பி.எம்.எஸ்.), குமரன், சுகுமாரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள்; தற்போது கரோனா காலமாக இருப்பதால் பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும். அவ்வாறு சம்பளம் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்காததற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். கீரிப்பாறை ரப்பர் தொழிற்கூடத்தில் தொழிலாளர்களுக்கு அதிக வேலைப்பளு வழங்குவதை கைவிடவேண்டும்.

மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து அரசு ரப்பர் கழகத்தின் வளர்ச்சிக்கான வழிகள் குறித்து ஆராயவேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது தளவாய் சுந்தரம் பேசுகையில்; 2013 டிசம்பர், 2018ம் ஆண்டு ஆகஸ்டு ஆகிய காலங்களில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தியும், ஊக்கத்தொகையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த பிப்ரவரி 17ம் தேதி முதல் சம்பள உயர்வு கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மார்ச் 24ம் தேதி முதல் கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் தோட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் முன்பணம் வழங்க தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி ஆணையிட்டதை தொடர்ந்து வழங்கப்பட்டது. கரோனா காலத்தில் வாழ்வாதாரம் பெறும் வகையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் ஆலை இயங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 7ம் தேதி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in