Published : 03 Sep 2020 02:27 PM
Last Updated : 03 Sep 2020 02:27 PM

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தார்: செப்.7 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

இனி தன் வாழ்நாள் முழுதும் ஒருபோதும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என, தேசிய க் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் உத்தரவாத மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், “காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா?’’ என்று கேள்வி எழுப்பி காணொலி வெளியிட்டிருந்தார். தேசியக் கொடியின் மூன்று வர்ணங்களுக்கு பசுமை, தியாகம், தூய்மை என்பதை மறுத்து புது விளக்கமும் கொடுத்தார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்ட எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில், சென்னை குற்றப்பிரிவு போலீஸார், நடிகர் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதித்ததாக தேசிய கவுரவப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக் கூடும் எனக் கூறி, எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், “தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி சேகர் உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம். அதே நேரத்தில் வழக்கை ரத்து செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்து உத்தரவாத மனுத்தாக்கல் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனது நிலையை விளக்கியுள்ள எஸ்.வி.சேகர் தான் செய்த சேவைகளைப் பட்டியலிட்டுள்ளார். தனது தாய் தந்தையரைவிட தேசியக் கொடியை தான் நேசிப்பதாகத் தெரிவித்துள்ளார். பள்ளி விழாக்களில் கலந்துகொள்ளும்போது பள்ளி மாணவர்களிடம் தேசியக் கொடியின் பெருமைகள் குறித்துப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்துப் பேசியதற்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும், தன் வாழ்நாள் முழுவதும் இனி ஒருபோதும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.சேகரின் உத்திரவாத மனுவைப் பதிவு செய்த நீதிபதி, எஸ்.வி.சேகரை வரும் செப்டம்பர் 7 ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (செப்.7) ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x