Published : 03 Sep 2020 01:49 PM
Last Updated : 03 Sep 2020 01:49 PM

கரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர தொடர் நடவடிக்கைகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்  

தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதன் அடிப்படையில், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வேலூரைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தமிழகத்தில் கரோனா தாக்கம் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கியது. முதலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலமாகவும், பின்னர் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் இருந்தும் கரோனா தொற்று அதிக அளவில் பரவியது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறைவாக இருந்த பாதிப்பு, பின்பு அதிகரித்தது. ஐந்து மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் கரோனா தொற்று கட்டுப்படுத்தும் அளவில் இல்லை. தினமும் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. புதுச்சேரியில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக அங்குள்ள அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அது போன்று எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவில்லை.

144 தடை உத்தரவு காலத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதால், துரித நடவடிக்கை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசின் விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். அதேசமயம் மனுதாரருக்கு மேலும் ஏதும் குறைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை அணுகும்படி அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x