Last Updated : 03 Sep, 2020 11:29 AM

 

Published : 03 Sep 2020 11:29 AM
Last Updated : 03 Sep 2020 11:29 AM

கரோனா மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கையில்லை என குற்றச்சாட்டு: புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வாயிற்கதவை மூடி அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா

புதுச்சேரியில் அதிகரித்துவரும் கரோனா தொற்று மற்றும் மரணத்தைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்காத அரசை கண்டித்து, அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வாயிற்கதவை மூடி வாயிலில் அமர்ந்து இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

இன்று (செப். 3) நடைபெற்ற போராட்டம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநிலம் முழுவதும் பரிசோதனையையும், படுக்கை வசதிகளையும் அதிகப்படுத்த வேண்டும் என்ற மத்திய நிபுணர் குழுவின் ஆலோசனை ஏற்கப்படவில்லை. கடந்த வாரத்தில் தினந்தோறும் சுமார் 1,800 நபர்களுக்கு பரிசோதனை செய்து வந்த நிலையில், தினந்தோறும் குறைந்தது 3,000 நபர்களுக்கு மேல் பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். ஆனால், பரிசோதனை எண்ணிக்கை இன்று 1,800 இல் இருந்து 1,300 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பரிசோதனை 'கிட்'டுகளும், பரிசோதனை முடிவுகளை அறியும் கருவிகளையும் அதிகம் வாங்கியிருப்பதாக முதல்வர் கூறியிருந்தார். ஆனால், தற்போது பரிசோதனை எண்ணிக்கையை குறைத்துள்ளனர். ஏற்கெனவே இயங்கிய நடமாடும் பரிசோதனை கூடத்தையும் நிறுத்தியுள்ளனர்.

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் அதிகப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை தூங்கி கொண்டிருக்கிறது. அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 2,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ள நிலையில் அவற்றை அரசு இன்னும் கையகப்படுத்தவில்லை.

அரசிடம் போதிய கட்டிட வசதிகள் இருந்தும், அங்கு நோயாளிகளை தனிமைப்படுத்த அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாதாரண நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆன்டிஜென் டெஸ்ட் எடுக்கவில்லை. இவை எதையும் செய்யாமல் சுகாதாரத்துறை நிர்வாகம் மோசமான முறையில் செயல்படுகிறது.

ஆரம்பத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த இறப்பு விகிதம் இன்று 1.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி 10-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து வருகிறார்கள். இந்திய அளவில் சின்னஞ்சிறு மாநிலங்களின் வரிசையில் புதுச்சேரிதான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

இது சம்பந்தமாக அரசும், துணைநிலை ஆளுநரும் தங்களது அரசியல் விளையாட்டு, வார்த்தை ஜால அறிக்கைகளை தவிர்த்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இது தொடர்பாக பல முறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பொய்யான தகவல்களை தினமும் கூறிவருகின்றனர். எனவே, கரோனா தொற்றை தடுத்து, மரணத்தைக் குறைக்க சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிமுக தர்ணா போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x