சசிகலாவை வைத்து அதிமுகவை பலவீனப்படுத்த முயற்சி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சசிகலாவை வைத்து அதிமுகவை பலவீனப்படுத்த முயற்சி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
Updated on
1 min read

சசிகலாவை வைத்து அதிமுகவையும் தமிழக அரசியல் களத்தையும் பலவீனப்படுத்த மத்திய அரசும் மோடியும் முயற்சிக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான 6 மாத வட்டியை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு வட்டி தள்ளுபடி செய்தால் இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழில்கள் அதற்கு கீழே உள்ள தொழில் செய்பவர்கள் என அனைவரும் தப்பித்துக் கொள்வார்கள்.

இந்திய-சீன மோதல்

இந்திய - சீன பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு தவறானது. நாங்கள் அதை ஏற்கெனவே சொன்னபோது, காங்கிரஸ் கட்சிக்கு நாட்டுப்பற்று இல்லை என்றனர். இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்கள் நாங்கள். எங்களுக்கா நாட்டுப்பற்று இல்லை. லடாக்கில் மோதல் ஏற்பட்டபோது நம்முடைய வீரர்கள் 20 பேரும் சீன வீரர்கள் 40 பேரும் கொல்லப்பட்டனர். இந்திய எல்லையில் நமது வீரர்கள் கொல்லப்பட்டார்களா? இல்லை சீன எல்லையில் கொல்லப்பட்டார்களா? என்ற கேள்விக்கு பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் இதுவரை பதில் சொல்லவில்லை.

சிந்துபாத் கதை

சசிகலா விஷயத்தில் சிந்துபாத் கதைபோல் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இன்னும் சசிகலாவின் சொத்துகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். திடீரென்று சொத்துகளை கண்டுபிடிக்கிறார்கள்.

சசிகலாவை ஒரு ஆயுதமாக வைத்து அதிமுகவை பலவீனப்படுத்தலாமா? தமிழ்நாட்டின் அரசியல் களத்தை பலவீனப்படுத்தலாமா? என்று மத்திய அரசும் மோடியும் முயற்சிக்கின்றனர். இது தவறான முயற்சி. தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ்தான் முதன் முதலில் பணியை தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு நாங்கள் தயார். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in