சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கீழமை நீதிமன்றங்கள் செப்.7 முதல் நேரடி விசாரணை நடத்தலாம்:  உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கீழமை நீதிமன்றங்கள் செப்.7 முதல் நேரடி விசாரணை நடத்தலாம்:  உயர் நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களைப் போல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களும் மூடப்பட்டன.

அவசர வழக்குகள் மட்டும் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வழக்குகள் தேக்கம், வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களால் நீதிமன்றங்களைத் திறக்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

தற்போது தமிழகத்தின் 29 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கீழமை நீதிமன்றங்கள் செயல்பட, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான 7 மூத்த நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழுவால் அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேலும் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை மேற்கொள்ள அனுமதிப்பது என நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு நேரடி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும், சாட்சிகளுக்கும் மட்டும் நீதிமன்றத்துக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7-ம் தேதி முதல் நடைபெறும் நீதிமன்றப் பணிகள் குறித்து மீண்டும் செப்டம்பர் 22-ம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றச் செயல்பாடுகள் குறித்து வழக்கறிஞர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் பரிந்துரைகளைக் கேட்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in