Published : 02 Sep 2020 08:26 PM
Last Updated : 02 Sep 2020 08:26 PM

நெடுஞ்சாலைத்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் உத்தரவை செயல்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு காங்கிரஸ் நகர தலைவர் எஸ்.சண்முகராஜ், மாவட்ட முன்னாள் தலைவர் காமராஜ், தகவல் அறியும் உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, கார்த்திக் காமராஜ், மாவட்ட பொருளாளர் திருப்பதி ராஜா உள்ளிட்ட பலர் திரண்டு வந்து கோட்டாட்சியரின் உத்தரவை செயல்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், கோவில்பட்டி கோட்டாட்சியர் தலைமையில் கடந்த 18-ம் தேதி நடந்த கூட்டத்தில், நகரில் லட்சுமி மில் அருகே உள்ள மேம்பாலம் முதல் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் வரை உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் 7 நாட்களுக்குள் முழுமையாக அகற்ற வேண்டும்.

அதன் பின்னர், நீர்வழி ஓடை ஆக்கிரமிப்புகளையும் அகற்றிய பின் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டது.

ஆனால், நெடுஞ்சாலைத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் மெத்தன போக்கால் கோவில்பட்டி பிரதான சாலையில் செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து சாலை விரிவாக்க பணிக்கு உதவ வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x