Published : 02 Sep 2020 06:38 PM
Last Updated : 02 Sep 2020 06:38 PM

நீலகிரியில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கம்; பயணிகள் குவிவதால் நோய் பரவும் அபாயம்

பேருந்துகளில் மக்கள் கூட்டம்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் கூட்டமாகக் குவிந்து வருகின்றனர். இதனால் கரோனா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துகளை இயக்க அரசு அனுமதித்துள்ளது.

சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இன்று (செப். 2) வரை 1,667 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 1339 நபர்களும் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். 317 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்ததை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பேருந்து நிலையங்களில் இருந்து 104 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அலைமோதும் பயணிகள் கூட்டம்

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், கரோனா வைரஸ் எளிதில் வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சு.மனோகரன் கூறும்போது, "பொது முடக்கம் காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று முதல் மாவட்டத்துக்குள் பேருந்துகள் இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்டங்களுக்கு இடையே வரும் 7-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்க அரசு அனுமதித்துள்ளது.

சு.மனோகரன்

சமவெளிப் பகுதிகளைப் போல் நீலகிரி மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து இல்லாத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள்தான் மக்களுக்கான ஒரே போக்குவரத்து.

இதனால், மக்கள் அரசுப் பேருந்துகளை நம்பியுள்ளனர். பேருந்து சேவை இல்லாமல் குக்கிராமங்களில் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். பணிக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்தனர். பேருந்து சேவை தொடங்கியதால் மக்கள் பணிக்குச் செல்ல முற்படுகின்றனர்.

ஆனால், மாவட்டத்தில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், இயக்கப்படும் பேருந்துகளில் மக்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, பேருந்துகளில் பயணிகள் முண்டியடித்துப் பயணிக்கின்றனர். இதனால், தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதன் காரணமாக கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கக்கூடும். எனவே, போக்குவரத்துக் கழகம் மாவட்டத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

மேலும், பேருந்துகள் கிராமங்களில் இரவில் தங்கினால்தான் அப்பகுதி மக்கள் காலையில் குறித்த நேரத்தில் பணிக்குச் செல்ல முடியும்" என்றார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்டப் போக்குவரத்துக் கழக மேலாளர் சிவகுமார் கூறும் போது, "நீலகிரி மாவட்டத்தல் உள்ள 5 கிளைகளில் 104 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கிராமப்புறங்களில் பேருந்துகள் 'ஹால்ட்' செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் குன்னூரில் கிராமப்புற பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் தனிமனித இடைவெளி இல்லாமல் பேருந்தில் கூட்டமாக பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது .

கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.

குன்னூரில் 20 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதன் காரணமாக கிராமப்புற பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்தனர். இதன் காரணமாக இயங்கிவரும் ஒரு சில அரசுப் பேருந்துகளில் முந்தி அடித்து பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அளவுக்கு மீறி அதிக ஆட்கள் பயணம் மேற்கொள்வதால் கரோனா தொற்று எளிதில் பரவக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்துப் பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x