Published : 02 Sep 2020 03:17 PM
Last Updated : 02 Sep 2020 03:17 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; அடுத்த 2 நாளில் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 15 செ.மீ., காமாட்சிபுரம் (திண்டுக்கல் ) 11 செ.மீ., நிலக்கோட்டை (திண்டுக்கல்) 10 செ.மீ., பாடாலூர் (பெரம்பலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்) தலா 8 செ.மீ., திருச்சுழி (விருதுநகர்), தாளவாடி (ஈரோடு), கொள்ளிடம் (நாகப்பட்டினம்) தலா 7 செ.மீ., விழுப்புரம் 6 செ.மீ., மானாமதுரை (சிவகங்கை), அரவக்குறிச்சி (கரூர்), திருச்சி விமான நிலையம் (திருச்சி), வேடசந்தூர் (திண்டுக்கல்), மூலநூர் (திருப்பூர்), சாத்தூர் (விருதுநகர்) தலா 5 செ.மீ.,

மீனவர்களுக்கான எச்சரிக்கை

செப்டம்பர் 2-ம் தேதி அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 2, 3 தேதிகளில் கேரளா, லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 2-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி செப்டம்பர் 3-ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 முதல் 2.9 மீட்டர் வரை எழும்பக்கூடும்''.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x