Published : 02 Sep 2020 03:01 PM
Last Updated : 02 Sep 2020 03:01 PM

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து செய்யும் உத்தரவு; தமிழக அரசின் மறுஆய்வு மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை

அரசுப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்த அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனை) சட்டம் 2016-ல் அரசு ஊழியர்களின் பதவி உயர்வும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படும் என்ற சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக் கோரியும், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிடக் கோரியும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் ராஜா, சென்னையைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காமல் இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்கினால் ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரித்துவிடும் எனக் கூறி அந்தச் சட்டப் பிரிவுகளை ரத்து செய்தது.

மேலும், மக்கள் நலன் காக்கும் அரசு அனைவரின் நலனையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பகுத்தறிவுடன் கூடிய சமநிலையுடன் அரசு இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. எனவே, இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்டவிரோதமானது. எனவே, மனுதாரர்களுக்கு 12 வாரங்களுக்குள் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி கணக்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பாக ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும் சீனியாரிட்டி கணக்கிட்டு அதன் அடிப்படையில் 8 வாரத்தில் பதவி உயர்வு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு, டி.என்.பி.எஸ்.சி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தமிழக அரசின் மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.

அதேவேளையில் உச்ச நீதிமன்றம் 8 வாரத்தில் தனது தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதை செய்யத் தவறிய தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி செயலாளர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது 6 வாரத்தில் பதிலளிக்க, தலைமைச் செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x