

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2 ஆண்கள், ஒரு பெண் என மூன்று பேர், ஆகஸ்டு 28-ம் தேதி உயிரிழந்தனர். ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக மூன்று பேரும் உயிரிழந்ததாகப் புகார் எழுந்தது.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை உதவிப் பேராசிரியர் ரவி நாதன், மருத்துவத்துறை தலைவர் பாபு ஆனந்த் மற்றும் செவிலியர்கள் 5 பேர் என 7 பேருக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (suo-motu) வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், 3 பேர் உயிரிழப்பு தொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.