Published : 01 Sep 2020 05:52 PM
Last Updated : 01 Sep 2020 05:52 PM

பக்தர்களுக்கு பலத்த கட்டுப்பாடுகளுடன் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் தரிசனம்

கோவில்பட்டியில் பலத்த கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் செண்பகவல்லி அம்பாள் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஆக.31-ம் தேதி வரை வழிபாட்டுதலங்களில் பக்தர்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் செப்.1-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, பக்தர்கள் சுமார் 6 அடி இடைவெளியுடன் நிற்பதற்கு கோயில் வளாகத்தில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளின்படி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

ஆனால் திருப்பள்ளி எழுச்சி, விளா பூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை, பள்ளியறை பூஜை ஆகியவற்றுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், காலை 8.30 மணிக்கு பக்தர்களுக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

5 மாதத்துக்கு பின்னர் கோயிலுக்குள் தரிசனம் செய்யலாம் என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்களுக்கு வெப்ப மானி முதல் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. கைகளை கழுவ சோப் திரவம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அம்பாள் சன்னதி முன்புள்ள வாசல் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், கொடி மரத்தை கடந்து சன்னதிக்கு வெளியே நின்று செண்பகவல்லி அம்பாளை தரிசனம் செய்தனர். பின்னர் நேராக பூவனநாத சுவாமி சன்னதிக்கு வெளியே நின்று சுவாமி தரிசித்தனர்.

தொடர்ந்து நவகிரக சன்னதி வழியாக மீண்டும் அம்பாள் சன்னதி முன்புறம் உள்ள வாயில் வழியாக வெளியே வந்தனர். காலை 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கொண்டு வந்த மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் தனியாக ஒரு இடத்தில் வைக்க அறிவுறுத்தப்பட்டனர். அதே போல் மாலையில் 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரைக்கு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் திருப்பதிராஜா தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x