Last Updated : 01 Sep, 2020 04:52 PM

 

Published : 01 Sep 2020 04:52 PM
Last Updated : 01 Sep 2020 04:52 PM

தனியார் கரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

திருச்சியில் தனியார் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருச்சி கரோனா பரவலைத் தடுக்க மாவட்டம் முழுவதும் 2 வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தக்கோரி வழக்கறிஞர் ராஜகோபால் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், திருச்சியில் 6 தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த 6 மருத்துவமனைகள் இல்லாமல் பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் எவ்வாறு கரோனா பரிசோதனை செய்வார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திருச்சி ஆட்சியர் தரப்பில், திருச்சியில் 2 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன, கரோனா பரிசோதனை முடிவுகள் 2 நாளில் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், திருச்சி மாவட்டத்துக்கு 2 பரிசோதனை மையங்கள் போதுமா? தனியார் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

ஊரடங்கு பெரும்பாலும் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணியாதவர்கள், கிருமி நாசினி பயன்படுத்தாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், திருச்சி கள்ளிக்குடி சந்தை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என நீதிபதிகள் கேட்டதற்கு, ஆட்சியர் தரப்பில் ஒரு வாரத்தில் சந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் கழிவுகள் உய்யக்கொண்டான் கால்வாயில் கலப்பது தொடர்பாக திருச்சி என்ஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை செப். 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x