Last Updated : 01 Sep, 2020 12:17 PM

 

Published : 01 Sep 2020 12:17 PM
Last Updated : 01 Sep 2020 12:17 PM

புதுச்சேரியில் புதிதாக 363 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 12 பேர் உயிரிழப்பு; 15 ஆயிரத்தை நெருங்கும் தொற்று எண்ணிக்கை

புதுச்சேரியில் இன்று புதிதாக 363 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப்.1) கூறும்போது, "புதுச்சேரியில் 1,323 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 316, காரைக்காலில் 4, ஏனாமில் 43, என மொத்தம் 363 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

மேலும், புதுச்சேரியில் 10 பேர், ஏனாமில் 2 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி ஷாஜி வீதியை சேர்ந்த 65 வயது முதியவர், வில்லியனூர் எஸ்.எம்.வி.புரம் பகுதியை சேர்ந்த 74 வயது மூதாட்டி, வில்லியனூர் கிழக்கு தேரோடும் வீதியை சேர்ந்த 84 வயது முதியவர், பூமியான்பேட்டை ஜவகர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 64 வயது முதியவர், வாணரப்பேட்டை கல்லறை மெயின் ரோட்டை சேர்ந்த 82 வயது முதியவர், ஐயங்குட்டிப்பாளையம் கோபாலன் கடை ரோட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டி, ரெட்டியார்பாளையம் மேரி உழவர்கரை மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த 59 வயது நபர் ஆகியோர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

முதலியார்பேட்டை அய்யனார் கோயில் வீதியை சேர்ந்த 61 வயது முதியவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், அபிஷேகப்பாக்கம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த 36 வயது ஆண் நபர் ஜிப்மரிலும், கீழ்சாத்தமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 72 வயது முதியவர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியிலும், ஏனாம் தோடா வீதியை சேர்ந்த 60 வயது முதியவர், ஏனாம் தரியல திப்பா பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகிய இருவரும் ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.63 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 14 ஆயிரத்து 766 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,038 பேர், காரைக்காலில் 107 பேர், ஏனாமில் 119 பேர் என 2,264 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 2,326 பேர், காரைக்காலில் 84 பேர், ஏனாமில் 160 பேர், மாஹேவில் 17 பேர் என மொத்தம் 2,587 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,851 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 264 பேர், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் 36 பேர், மாஹேவில் 5 பேர் என மொத்தம் 341 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,675 (65.52 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 76 ஆயிரத்து 105 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 60 ஆயிரத்து 51 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x