Published : 01 Sep 2020 12:49 PM
Last Updated : 01 Sep 2020 12:49 PM

திமுக பொதுச் செயலாளர் - பொருளாளர் தேர்வு: 9-ம் தேதி கூடுகிறது பொதுக்குழு; ஸ்டாலின் அறிவிப்பு

அண்ணா அறிவாலயம்: கோப்புப்படம்

சென்னை

திமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 3-ம் தேதியும் கூடுவதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவால், அப்பொறுப்பு காலியாக உள்ளது. இதனால், புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்கான திமுக பொதுக்குழு கடந்த மார்ச் 29-ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட உள்ளதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, துரைமுருகன் தன்னிடம் கடிதம் அளித்ததாகவும், அதனால், மார்ச் 29-ம் தேதி பொருளாளர் பதவிக்கும் தேர்வு நடைபெறும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனிடையே கரோனா ஊரடங்கு காரணமாக, திமுக பொதுக்குழு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, பொருளாளர் பொறுப்பில் துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக பொருளாளர், பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக திமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி கூட உள்ளது.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப்.1) வெளியிட்ட அறிவிப்பில், "திமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி, புதன்கிழமை, காலை 10 மணியளவில், எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் - பொருளாளர் தேர்வு தொடர்பாக இந்த பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக ஸ்டாலின் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ஸ்டாலின் இன்று வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், "திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 3-ம் தேதி, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

அப்போது, மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x