Published : 01 Sep 2020 07:34 AM
Last Updated : 01 Sep 2020 07:34 AM

தனியார் கிளினிக்கில் அதிக கட்டணம் வசூல் மாநகராட்சியின் மாலைநேர மருத்துவ மையம் மீண்டும் மலருமா?- நாட்பட்ட நோயாளிகள் எதிர்பார்ப்பு

சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 14 சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை காலை 8 முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது. சிறப்பு மருத்துவ சேவைக்கு அரசு பொது மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.

மாலை நேரங்களில் மருத்துவரிடம் செல்லும் பழக்கம் மக்களிடம் அதிகமாக உள்ளது. ஆனால் மாநகராட்சி மருத்துவமனைகளில் மாலை நேர மருத்துவ சேவைகள் மற்றும் சிறப்பு மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை. இதை தனியார் மருத்துவமனைகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன.

இதை கருத்தில் கொண்டு மத்திய அரசின், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின்கீழ் மாநகராட்சி மருத்துவமனைகளில் மாலை நேர மருத்துவ மையங்கள் 2018-ம் ஆண்டு தொடங்கின. 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த சேவை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை செயல்பட்டன. இதில் குழந்தை நலம், மகளிர் நலம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, மனநலம், ஆர்த்தோ, பிசியோதெரபி ஆகிய சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இம்மையங்கள் இயங்காததால் சர்க்கரை நோய் உள்ளிட்ட சிறப்பு மருத்துவச் சேவை கிடைக்காமல் ஏழை மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த நோயாளிகள் சிலர் கூறியதாவது:

தனியார் கிளினிக்குகளில் சிறப்பு மருத்துவ ஆலோசனைக்கு மட்டும் ரூ.500 வசூலிக்கப்படுகிறது. சில மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணமாக ரூ.150 வாங்கிக்கொண்டு, ரூ.800 வரை அத்தியாவசியமற்ற மருந்துகளை எழுதி கொடுக்கின்றனர். அப்படி அவர்கள் எழுதித் தரும் மருந்து வேறு எந்த கடையிலும் கிடைக்காது. அவரிடம் மட்டுமே கிடைக்கும். இதனால் நோயாளிகளுக்கு அதிகம் செலவாகிறது. எனவே உடனடியாக மாலை நேர சிறப்பு மருத்துவ சேவையை மாநகராட்சி தொடங்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறும்போது, ‘‘மாலை நேர மருத்துவ சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x