Last Updated : 31 Aug, 2020 04:37 PM

 

Published : 31 Aug 2020 04:37 PM
Last Updated : 31 Aug 2020 04:37 PM

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: சிபிஐ விசாரணை மீண்டும் தீவிரம்- ஆட்சியர் அலுவலகத்தில் ஆவணங்களைப் பெற்றனர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான குழுவினர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கரோனா ஏற்பட்டதால் வழக்கு விசாரணையில் சில காலம் தொய்வு ஏற்பட்டது.

தற்போது அனைவரும் கரனோவில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான விசாரணைக் குழுவினர் கடந்த ஒரு வாரமாக திருச்செந்தூரில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் மூன்று அதிகாரிகள் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். சாத்தான்குளம் சம்பவம் நடந்த போது 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இது தொடர்பான உத்தரவு நகலை ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

மேலும், தந்தை, மகன் மரணத்தை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலையம் சில நாட்கள் வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு நகலையும் சிபிஐ அதிகாரிகள் பெற்றுச் சென்றதாக ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் தங்கள் விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x