Published : 31 Aug 2020 04:25 PM
Last Updated : 31 Aug 2020 04:25 PM

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும்: தமாகா யுவராஜா வலியுறுத்தல்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''நாடு முழுவதும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல், அதாவது நாளை முதல் கட்டணத்தை உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு தளர்வு செப்டம்பர் 1 முதல் என அரசு அறிவித்துள்ள நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. மாறாக ஊரடங்கு ஆரம்பித்து 162 நாட்கள் கடந்த நிலையில் பெட்ரோலுக்கு ரூபாய் 13.71ம் டீசலுக்கு ரூபாய் 13.15ம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. வங்கிகளில் வாங்கிய கடனுக்கு தவணைத் தொகையைச் செலுத்தமுடியாமல் தள்ளாடிவரும் நிலையில் வங்கிக் கடன் தவணை தொகையைச் செலுத்த வங்கிகள் இப்போதே அலைபேசி வழியாகத் தொடர்புகொள்ளத் தொடங்கிவிட்டன.

மக்கள் கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக வேலையில்லாமல், இப்போதுதான் மக்கள் அனைவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருபக்கம் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறுபக்கம் சுங்கக் கட்டண உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதால், சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயர்த்தப்படும். எனவே, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என மக்கள் கவலையில் உள்ளார்கள். இந்தச் சூழ்நிலையில் அரசின் இந்த மாதிரியான நடவடிக்கைகள் மக்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. எனவே தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக இத்தகைய கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு யுவராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x