வசந்தகுமார் படத்துக்கு ஸ்டாலின் அஞ்சலி: சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்றார்

வசந்தகுமார் படத்துக்கு ஸ்டாலின் அஞ்சலி: சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்றார்
Updated on
1 min read

சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்ற ஸ்டாலின், அங்கு அலங்கலரித்து வைக்கப்பட்டிருந்த வசந்தகுமார் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் எம்.பி.யும், வசந்த் &கோ உரிமையாளருமான வசந்தகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் தேதி மாலை காலமானார்.

மறுநாள் அவரது உடல் தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. வழியில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று அவரது உடல் அகத்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உருவப்படம் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மலரால் இன்று அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டோர் சென்றனர். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in