Last Updated : 31 Aug, 2020 12:30 PM

 

Published : 31 Aug 2020 12:30 PM
Last Updated : 31 Aug 2020 12:30 PM

வாலிநோக்கம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 7 டன் எடையுள்ள திமிங்கலம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகையான நீல திமிங்கலத்தை வனத்துறையினர் மீட்டு உடல் கூறு ஆய்வுக்குப் பின் புதைத்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற்பசு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் இப்பகுதியில் அரியவகை கடற்பசு, டால்பின், திமிங்கலம், சுறாக்கள் கரை ஒதுங்கியுள்ளன. அதில் ஒரே ஒரு சுறா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுமார் 20 அடி நீளமும் 8 அடி அகலமும், 7 டன் எடையும் உடைய புளுவேல் எனப்படும் நீலத் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் வாலிநோக்கம் பகுதி கடற்கரையில் நேற்று கரை ஒதுங்கியது. இதைக்கண்ட மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று திமிங்கலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கரை ஒதுங்கிய திமிங்கிலம் இறந்து ஒரு மாதம் இருக்கும் எனத் தெரிகிறது. இத்திமிங்கலம் 70 முதல் 120 ஆண்டுகள் வரை உயிருடன் வாழும். தற்போது கரை ஒதுங்கிய திமிங்கலம் சுமார் 35 முதல் 40 வயதிருக்கும். அதன் இரு பக்கவாட்டு துடுப்புகளும் தலா 1 மீட்டர் நீளமுடையவையாக இருந்தன.

இது மீன் முட்டைகளையும், மிதக்கும் உயிரினங்களையும் விரும்பி உண்ணும், ஆழமான கடலில் வசிக்கும். வனச்சரக சட்டப்படி இந்தவகை மீனை வேட்டையாடுவது குற்றமாகும். படகுகளில் மோதி காயப்படுவதாலும், நெகிழி போன்றவற்றை உண்ணுவதாலும், எண்ணெய் படலத்தில் சிக்குவதாலும் இவை உயிரிழக்கின்றன என வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதனையடுத்து கால்நடை மருத்துவர் மூலம் திமிங்கலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, கடற்கரை பகுதியிலேயே உடல் புதைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x