ஊரடங்கில் பெரும் தளர்வு; ஆனால் 144 தடைச்சட்டம் அமலில் உள்ளது கேலிக்கூத்து: முத்தரசன் விமர்சனம்

ஊரடங்கில் பெரும் தளர்வு; ஆனால் 144 தடைச்சட்டம் அமலில் உள்ளது கேலிக்கூத்து: முத்தரசன் விமர்சனம்
Updated on
1 min read

ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்ட நிலையில், குற்றவியல் சட்டப் பிரிவு 144-ன் படியான தடை உத்தரவு அமலில் இருக்கும் என்பது கேலிக்கூத்தாகும். அரசு நிகழ்ச்சிகளை, ஆளும் கட்சியின் அரசியல் பரப்புகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது சட்ட அத்துமீறலாகும் என முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

ஊராடங்கு நடைமுறைகள் தொடங்கி 150 நாட்கள் கடந்த நிலையில் தொழிலகங்களில் 100 சதவீதம் தொழிலாளர்கள் பணிபுரியலாம், அரசு அலுவலகங்களும் 100 சதவீதப் பணியாளர்களோடு இயங்கும். காட்சி அறைகள் உள்ளிட்ட வர்த்த வளாகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் முழு அளவில் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேநீர்க் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம் என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுத்ததை அரசு கருத்தில் கொள்ளவில்லை.

மெட்ரோ ரயில் இயக்குவதும், மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்குவதும் பொதுமக்களின் நேரத்தை வீணடித்து, பணச் செலவை அதிகரிக்கும் செயலாகும். தமிழ்நாடு முழுவதற்குமான பொதுப் போக்குவரத்தை இயக்குவது மிக, மிக அவசியமாகும்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்ட நிலையில், குற்றவியல் சட்டப் பிரிவு 144ன் படியான தடை உத்தரவு அமலில் இருக்கும் என்பது கேலிக்கூத்தாகும். அரசு நிகழ்ச்சிகளை, ஆளும் கட்சியின் அரசியல் பரப்புகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது சட்ட அத்துமீறலாகும்.

கரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் அரசியல் ஆதாயம் தேடும் அதிமுக அரசின் ஜனநாயக விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை அனுமதித்து, சட்டபூர்வ ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது”.

இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in