Published : 31 Aug 2020 10:30 AM
Last Updated : 31 Aug 2020 10:30 AM

ஊரடங்கில் தளர்வுகள்: மத்திய அரசு அனுமதித்தாலும் மாநிலத்தில் தொடரும் தடைகள்

சென்னை

ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அனுமதித்தாலும், மாநிலத்தில் சில தடைகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் சில தளர்வுகளை அறிவித்தது. அதில், மாநிலங்களுக்கிடையில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மாநிலங்களுக் கிடையில் பயணிக்க இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது.

சமூக, கல்வி, விளையாட்டு, கேளிக்கை, கலாச்சாரம், ஆன்மிகம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை செப்.21 முதல் நடத்தலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், தமிழகத்தில் இவற்றுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

செப்.21 முதல் திருமணம், இறுதிச்சடங்கு ஆகியவற்றில் 100 பேர் வரை பங்கேற்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அது தொடர்பான எந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடவில்லை.

144 தடை நீடிக்கும்...

இது தவிர, தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள சில தடை கள் தொடர்ந்து நீடிக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவின்கீழ் பொது இடங்களில் 5 பேருக்குமேல் கூடக் கூடாது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடை பிடிக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவ னங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் செப்.30 வரை இயங்க தடை தொடர்கிறது. இந்நிறுவனங்கள் இணைய வழி கல்வி கற்றலை தொடரலாம்.

திரையரங்குகள், நீச்சல்குளங் கள், பொழுதுபோக்கு பூங்காக் கள் (கேளிக்கை மற்றும் வேடிக்கை விளையாட்டு பூங்காக் கள்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனுமதி இல்லை. மத்திய உள்துறை அமைச் சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்கள் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும். புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை தொடரும். மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை தொடரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x