

சென்னையில் பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு நாளை முதல் மாநகரபேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளின் இயக்க எல்லை இன்று அறிவிக்கப்படுகிறது.
கரோனா ஊரடங்கில் தமிழக அரசின்புதிய தளர்வின்படி, வரும் 1-ம் தேதி (நாளை) முதல் மாவட்டத்துக்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து சேவைவழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எல்லை சென்னையையும் தாண்டி திருவள்ளூர், செங்கை,காஞ்சி மாவட்டங்கள் வரை உள்ளது.
எனவே, தமிழக அரசின் அறிவிப்புப்படி, மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளின் எல்லை எதுவரையில் செல்லும் என்பதில் குழப்பம் உள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ சென்னை மாநகர எல்லைவிரிவாக்கம் காரணமாக புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், தற்போது மாவட்ட எல்லைக்குள் மட்டுமே பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, மாநகர பேருந்துகள் எதுவரையில் இயக்கப்படும் என்பது இன்று (31-ம் தேதி) இறுதி செய்து அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு பேருந்திலும் தலா24 பயணிகள் அனுமதிக்கப்படுவர். மின்சார ரயில்கள் இயக்கப்படாததால்,பயணிகள் பேருந்துகளை நம்பியே பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, மாநகர பேருந்துகள் நாளைமுதல் முழு அளவில் இயக்கப்படும்.’’என்றனர்.