Published : 31 Aug 2020 07:22 AM
Last Updated : 31 Aug 2020 07:22 AM

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கரோனா தொற்றால் நுரையீரல் பாதித்த 97 வயது முதியவர் குணமடைந்தார்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட 97 வயது முதியவர் குணமடைந்தார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத்திணறல் இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக செயற்கை சுவாச வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த 97 வயது முதியவர் சூசை என்பவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 19-ம்தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியு) மாற்றப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பூரணமாக குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார். முன்னதாக மருத்துவமனை டீன் பாலாஜி, கண்காணிப்பாளர் கணேஷ், ஆர்எம்ஓ ரமேஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து அவரை வழி அனுப்பி வைத்தனர்.

இதேபோல், சென்னையைச் சேர்ந்த கணேஷ் அய்யர் (92) என்பவரும் கரோனா தொற்று, நுரையீரல்பாதிப்பு, சர்க்கரை அளவு அதிகரிப்புடன் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் அவரும் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

இதுதொடர்பாக மருத்துவமனை ஆர்எம்ஓ ரமேஷ்கூறும்போது, “இந்த மருத்துவமனையில் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில்சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைபவர்களின் விகிதமும் அதிகமாகவுள்ளது. இதயம், சிறுநீரகம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் விரைவில்குணமடைந்து வருகின்றனர். இதுவரை கரோனாவில் இருந்து 24 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x