Published : 30 Aug 2020 07:53 AM
Last Updated : 30 Aug 2020 07:53 AM

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு 

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்காததால், வங்கிக் கிளை முன்பு தீக்குளித்த இளைஞர் நேற்று உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்(38). வெல்டரான இவர் வல்லத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வீடுகட்டுவதற்காக கடந்த 2015-ல் ரூ.9 லட்சம் கடன் வாங்கியிருந் தார். இந்நிலையில், கடன் தொகையில் சில தவணைகளை ஆனந்த் செலுத்தவில்லை என்று கூறி, அவரது வீட்டை ஏலம் விடுவதற்கான நோட்டீஸை வங்கி நிர்வாகம் வழங்கியதாக தெரிகிறது.

இதையடுத்து, கடந்த 27-ம் தேதி வங்கிக்குச் சென்ற ஆனந்த், அங்கிருந்த மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடன் தவணையைக் கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, வங்கி வாசலில் ஆனந்த் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையறிந்த ஆனந்த்தின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், “ஆனந்த்தை தற்கொலைக்கு தூண்டிய வங்கி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வங்கியில் வேலை வழங்க வேண்டும். வங்கித் தரப்பு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கூறி மருத்துவமனை முன்பும், வங்கிக் கிளை முன்பும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x