

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் ஊழியர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலகம், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் இயங்கி வருகிறது.
சிதம்பரம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் நிலைய அலுவலர் உட்பட 3 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று ஏற்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி விடுதியில் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிதம்பரம் தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்குள் யாரும் உள்ளே செல்லாதவாறு கயிறு கட்டி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது.
தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் வீரர்கள் தினந்தோறும் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று கிருமி நாசினி தொடர்ந்து தெளித்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.