Published : 29 Aug 2020 11:46 AM
Last Updated : 29 Aug 2020 11:46 AM

இன்முகத்திற்கும் எளிமைக்கும் இணைபிரியாத சொந்தக்காரர்; வசந்தகுமார் மறைவுக்கு திமுக இரங்கல் தீர்மானம்

வசந்தகுமார்: கோப்புப்படம்

சென்னை

இன்முகத்திற்கும், எளிமைக்கும் இணைபிரியாத சொந்தக்காரர் என, வசந்தகுமார் மறைவுக்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.29), திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த அ.ரகுமான்கானின் திருவுருவப் படத்தினை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.

அப்துல் ரகுமான் திருவுருவப் படத்தினை திறந்து வைத்த ஸ்டாலின்

பின்னர், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான வசந்தகுமார் மறைவுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பிறகு இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்:

தீர்மானம்: இன்முகத்திற்கும் எளிமைக்கும் தளராத முயற்சிக்கும் இணைபிரியாத சொந்தக்காரர் வசந்தகுமார்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான ஹெச்.வசந்தகுமாரின் திடீர் மறைவுக்கு திமுகவின் இந்தக் கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

கரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து கொடூரமாகப் பறித்து விட்டது அதிர்ச்சியளிக்கிறது.

குமரி அனந்தனின் சகோதரரும், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பாவுமான வசந்தகுமார், இன்முகத்திற்கும், எளிமைக்கும் இணைபிரியாத சொந்தக்காரர்.

தொகுதி மக்களின் பாசத்தை கட்சி வித்தியாசமின்றிப் பெற்றவர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பெற்ற அவர், சென்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 'மக்கள் பணியே மகேசன் பணி' என்று பாடுபட்டவர்.

'வெற்றிக் கொடிகட்டு, 'வெற்றிப் படிக்கட்டு' ஆகிய புத்தகங்களை எழுதி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்டிய பெருந்தகையாளர்.

கடின உழைப்பால் 'வசந்த் அண்ட் கோ' என்ற நிறுவனத்தைக் கட்டியெழுப்பி, கடைக்கோடி மக்களின் அன்பைப் பெற்றவர்.

காங்கிரஸ் கட்சிக்காக 'வசந்த் டிவி'யைத் தோற்றுவித்து, அரசியல் வேறு, மக்கள் பணி வேறு, வர்த்தகம் வேறு என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு, பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த வசந்தகுமார், சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியின் பேரன்பைப் பெற்றவர்.

வசந்தகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் இந்தக் கூட்டம், தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

பொதுவாழ்வில் இருப்போர் குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளாக இருப்போர் அனைவருமே தங்களது சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை எச்சரிக்கையோடு முறையாக மேற்கொண்டு, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து, கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டிட வேண்டும் என்று இக்கூட்டம், கட்சி வித்தியாசம் பாராமல் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறது"

இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x