Published : 29 Aug 2020 09:58 AM
Last Updated : 29 Aug 2020 09:58 AM

ஊழியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு: சேலம் ஆட்சியர் அலுவலகம் மூன்று நாட்கள் மூடல்

சேலம் ஆட்சியர்அலுவலகத்தில் ஆறு ஊழியர்கள் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானதை அடுத்து, கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிக்காக நேற்று முதல் மூன்று நாட்களுக்கு ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 9,379 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 6,222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 126 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,031 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா நோய் தொற்றால் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 15 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் மேலும் ஆறு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பணியாற்றி வரும் நிலை யில், கரோனா தொற்று மற்றவர்களுக் கும் பரவாமல் தடுக்கும் விதமாக, நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தை மூடி விட்டு, கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணி மேற்கொள்ள ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார். இதன்படி, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று திடீரென ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டதால், பல்வேறு பணி சார்ந்து வெகு தொலைவில் இருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன், வீடு திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x