Published : 28 Aug 2020 06:17 PM
Last Updated : 28 Aug 2020 06:17 PM

யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை, அரும்பாக்கம், அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்ட மேற்படிப்பு 2020 ‐ 21 ஆம் கல்வியாண்டு அறிவிக்கை

சென்னை, அரும்பாக்கம், அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்ட மேற்படிப்பிற்கென மொத்தமுள்ள 15 இருக்கைக்களுக்காக, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேர்க்கைக்கான கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது பிறபதிவு பெற்ற மருத்துவப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டம் [BNYS] இயற்கை மருத்துவப் பட்டயம் [N.D.(OSM)] ஒன்றைப் பெற்றிருக்கவேண்டும். அதற்குரிய சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் தனது பெயரை தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் (Tamil Nadu Board of Indian Medicine, Chennai 106 ) பதிவு செய்திருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மருத்துவப் பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திலிருந்து உரிய தகுதிச் சான்று பெற்று அதனை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

எம்.டி.(யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பு விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 30 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இந்த இயக்குநரகத்தாலோ, தேர்வுக் குழு அலுவலகத்தாலோ வழங்கப்பட மாட்டாது.

பதிவிறக்கம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணைப்புகளுடன் விண்ணப்பக் கட்டணமாகிய ரூ.3,000/- (ரூபாய் மூன்றாயிரம் மட்டும்) மதிப்புகொண்ட குறுக்குக் கோடிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கேட்பு வரைவோலையுடன் இறுதி நாளுக்கு முன் வந்து சேரவேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட (அருந்ததியினர்) / பழங்குடியினர் இன விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமான ரூ.3000/-ஐ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

குறுக்குக் கோடிட்ட வங்கி கேட்பு வரைவோலை "இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை 106’’ என்ற பெயரில் 31-08-2020 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பெறப்பட்டு சென்னையில் மாற்றத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான இணைப்புகளுடன் உரிய உறையில் "செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித் துறை, அரும்பாக்கம், சென்னை 600 106" என்ற முகவரிக்கு இறுதி நாளுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டு வந்து சேர்ந்திட வேண்டும். அறிவிக்கப்பட்ட இறுதி நாள் மற்றும் நேரத்திற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் அஞ்சல்துறை, கொரியர் சர்வீஸ் தாமதம் உட்பட எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் பெற கடைசி நாள் அக்டோபர் 05/2020 பிற்பகல் 5.30 மணிவரை. நுழைவுத் தேர்வு நாள் (தோராயமாக): 18-10-2020 முற்பகல் 9.30 மணி. மேலும், விவரங்களுக்கு இத்துறையின் வலைதளமான www.tnhealth.tn.gov.in -ல் தொடர்பு கொள்ளலாம்”.

இவ்வாறு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, இயக்குநர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x