Published : 28 Aug 2020 04:21 PM
Last Updated : 28 Aug 2020 04:21 PM

சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி: அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு குறித்த தீர்ப்புக்கு கே.எம்.காதர் மொகிதீன் வரவேற்பு 

திருச்சி 

அருந்ததியர் சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள் ஒதுக்கீடு சரியானதே என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

''அருந்ததியர் சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள் ஒதுக்கீடு சரியானதே என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி வலியுறுத்தி வந்த சமூக நீதிக் கொள்கைக்குக் கிடைத்துள்ள வெற்றியாகும்.

அடித்தட்டு மக்களும் அவர்களுக்குரிய வாழ்வியல் உரிமைகளைப் பெற்று, சமூக சமநிலையை அடைய வேண்டும் என்ற சிறந்த கோட்பாட்டை மிகத் துணிவுடன் தனது தலைமையிலான திமுக ஆட்சியில் நிறைவேற்றி தமிழக மக்களின் இதயங்களில் நிறைந்திருப்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவருடைய அறிவுறுத்தலின் பேரில் அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் முன்மொழிந்து, உரிய ஆய்வுகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டில் அரசிதழிலும் வெளியிடப்பட்டு, உள் ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது தமிழகத்தின் வரலாற்றுப் பெருமை.

சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழக மக்கள் எப்போதும் பெருமிதம் கொள்பவர்கள். இந்த சிறப்பான கோட்பாட்டுக்கு மேலும் வலிமை சேர்க்கக் கூடியதாக அமைந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உளமார வரவேற்கிறேன்''.

இவ்வாறு காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x