தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு; மன்னிப்பு கேட்டால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட மாட்டார்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு; மன்னிப்பு கேட்டால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட மாட்டார்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்
Updated on
1 min read

தேசியக் கொடியை அவமதித்ததற்காக மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால் நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட மாட்டார் என சென்னை மாநகர காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா? என்றும் பேசி வீடியோ வெளியிட்டார். மேலும், மூன்று வர்ணங்கள் குறித்த புதுவிளக்கம் ஒன்றையும் எஸ்.வி.சேகர் கூறினார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப் பிரிவினர் பதிவு செய்த வழக்கில், தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் காவல்துறையின் விளக்கத்தைப் பொறுத்து முடிவு என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி சேகர் தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன் ஆஜராகி, கடந்த முறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் கொடுத்த பின்னர், காவல்துறை 4 பக்க கேள்விகளைக் கொடுத்துப் பதிலளிக்கக் கூறியிருந்ததாகவும், அவற்றிற்கு இன்று ஆஜராகி பதில் அளித்துள்ளதாகவும், அந்தப் படிவத்தை தாக்கல் செய்து, ஆணையர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் அவர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்தார். ஆனால், இந்த வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

இவற்றைப் பதிவு செய்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினால் கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தெரிவித்துள்ளது குறித்து, மனுதாரர் முடிவெடுத்து, அவரது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in