Published : 28 Aug 2020 07:34 AM
Last Updated : 28 Aug 2020 07:34 AM

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 5 வகையான ஆவின் பால் பொருட்களுக்கு மக்கள் வரவேற்பு

சென்னை

ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மோர், லெஸ்ஸி உள்ளிட்ட 5 வகையான புதிய பால் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கரோனா அச்சம் நிலவிவரும் வேளையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நம் முன்னோர்கள் கடைபிடித்த இயற்கை வைத்திய முறைப்படியும் இஞ்சி, மஞ்சள், துளசி, சீரகம், பெருங்காயம், எலுமிச்சை, இந்துப்பு போன்ற மூலிகைப் பொருட்களைச் சேர்த்து, தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதிய வகை மோரை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிக வெப்பநிலையில் பசும் பால் பதப்படுத்தப்பட்டு, குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் அறை வெப்பநிலையில் 90 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் வகையில் சாதகமான பேக்குகளில் பசும் பாலை ஆவின் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

‘டீமேட்’ பால்

6.5% மற்றும் 9% புரதச்சத்து கொண்ட ‘டீமேட்’ என்ற புதிய வகைப் பாலை வர்த்தக ரீதியில் டீக்கடைகள், ஓட்டல்கள், சமையல் வல்லுநர்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.

இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் வகையில் மாம்பழம், சாக்லேட் சுவையுடன் கூடிய ‘லெஸ்ஸி’யையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்ளிட்ட பல பொருட்களை ஏற்கெனவே ஆவின் நிறுவனம் விற்பனை செய்துவரும் நிலையில், ஆவினின் இந்த புதிய பால் பொருட்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x