

கரானாவில் இருந்து மீண்டவரின் வீட்டு வாசலைத் தகரம் வைத்து அடைத்த விவகாரம் குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத் துறைச் செயலர், நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் வசிப்பவர் ஹேம்குமார் (50). இவர் வங்கி ஊழியராகப் பணியாற்றுகிறார். இவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று, ஆகஸ்டு 24-ம் தேதி அன்று வீடு திரும்பினார். இவர் வீட்டில் யாருக்கும் தொற்று இல்லை. வயதான தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் என 6 பேர் வீட்டில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் அன்று இரவே அவரது வீட்டுக்கு வந்த பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள், அவரின் வீட்டின் வாசலை தகரத்திலான ஷீட்டால் அடைத்தனர். குடும்பத்தினர் யாரும் வெளியே வர முடியாதவாறு கதவைத் தகரம் கொண்டு அடைத்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹேம்குமார் குணமாகி வந்த பின்னர், வீட்டு வாசலைத் தகர ஷீட்டால் அடைப்பது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாகப் பதில் கூறியதாகத் தெரிகிறது. இது அந்தக் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களும் இதுகுறித்துக் கேட்டதாகவும், யாரும் முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும் செய்தி வெளியானது.
இவ்வாறு தகர ஷீட் அடிப்பதை சிலர் செல்போனில் படம் பிடித்து நகராட்சி அதிகாரிகளின் செயலைப் பாருங்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலானது. இதுகுறித்த செய்தி பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளியானதை அடுத்து மீண்டும் மறுநாள் வந்த அவர்கள் தகர ஷீட்டை அகற்றிவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில், பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு (SUO-MOTU) செய்தது.
வழக்கை.விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், நகராட்சி அதிகாரிகள் அத்துமீறி நடந்துகொண்டது குறித்து மாநில சுகாதாரத் துறைச் செயலர், நகராட்சி நிர்வாக ஆணையர், பல்லாவரம் நகராட்சி ஆணையர் உரிய பதிலை 2 வாரத்தில் அளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.