கரோனா பரிசோதனை முடிவுவர தாமதமானால் தொற்று அதிகரிக்கும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

கரோனா பரிசோதனை முடிவுவர தாமதமானால் தொற்று அதிகரிக்கும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Updated on
1 min read

கரோனா பரிசோதனை முடிவு வர தாமதம் ஏற்படுவதால், முடிவுக்குக் காத்திருக்கும் நோயாளிகளால் மேலும் பலர் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி இந்திரா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகோபால், திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் காணொலி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள், திருச்சியில் எத்தனை தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது? என்றனர். அதற்கு அரசு வழக்கறிஞர், 10 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, கரோனா பரிசோதனை முடிவு வழங்க என்ன கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? சோதனை முடிவுகள் வர தாமதம் ஆவதால், முடிவுக்காக காத்திருக்கும் கரோனா நோயாளிகளால் மேலும் பலருக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர், விசாரணையை செப். 1-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in