Last Updated : 27 Aug, 2020 12:34 PM

 

Published : 27 Aug 2020 12:34 PM
Last Updated : 27 Aug 2020 12:34 PM

முதல்வரின் டெல்டா வருகை; முன்கூட்டியே வெளியிடப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பாணை!

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக நேரில் சென்று ஆய்வு நடத்திவரும் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று ஒரே நாளில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னர் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவுக்காக டெல்டா மாவட்டங்களுக்கு வந்த முதல்வர் பழனிசாமி, அதற்குப் பின்னர் இப்போதுதான் வருகிறார். அவர் வரும் நேரத்தில் விவசாயச் சங்கங்களின் மனதைக் குளிரவைக்கும் விதமாக நேற்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பிப்ரவரி மாதம் 9-ம் தேதி முதல்வரால் அறிவிக்கப்பட்டு 20-ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆறு மாதங்கள் கடந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், வேளாண் மண்டத்துக்கான வரையறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை என்று தமிழக அரசு பதிலளித்தது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடுமையான அதிருப்தி எழுந்தது.

இந்த நிலையில், இன்று டெல்டா பகுதிக்கு முதல்வர் வரும்போது அந்த அதிருப்தி பிரதிபலித்துவிடக் கூடாது என்பதற்காக வேளாண் மண்டலம் குறித்த அறிவிப்பாணையை நேற்றே வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. அதில் வேளாண் மண்டலம் குறித்த வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மகிழ்ச்சியுடன் ஆய்வுக்கு வருகிறார் முதல்வர். சென்னையில் இருந்து கார் மூலம் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் 32 கோடி ரூபாய் மதிப்பிலான 22 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற 33 திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

இதை முடித்துக் கொண்டு மதிய உணவுக்குப் பின் சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் சென்றடையும் முதல்வர் பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இங்கும் வணிகர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் விவசாயிகளிடம் கலந்து உரையாடுகிறார். அத்துடன் 207.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்கிறார். 43.60 கோடி மதிப்பீட்டில் பணி முடிந்த 13 திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து திருவாரூர் செல்லும் முதல்வர் அங்கு இரவு தங்குகிறார். நாளை திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்ட ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x