Published : 27 Aug 2020 09:42 AM
Last Updated : 27 Aug 2020 09:42 AM

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓணம் பண்டிகைக்கு தமிழக பூக்களை அனுப்பத் தடை: கேரள அரசின் நடவடிக்கையால் விவசாயிகள் அதிர்ச்சி

ஈரோடு

ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு வெளி மாநில பூக்களை வாங்குவதற்கு, கேரள அரசு தடை விதித்துள்ளதால், சத்தியமங்கலம் பூ விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுநடத்தி, தமிழக மலர்கள் கேரளா செல்ல அனுமதி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில், 25 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பளவில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, காக்கடா, ரோஜா, ஜாதிமல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இது தவிர, மைசூரு, பெங்களூரு, கேரளா, மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கும் சத்தியில் இருந்து பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய பூக்கள் தடைபட்டுள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

கடந்த ஐந்து மாதங்களாக வெளிமாநிலங்களுக்கு பூக்கள் செல்லாததால், நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை வரவுள்ளது. ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது, சத்தியமங்கலத்திலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பூக்கள் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படும்.

தற்போது ஊரடங்கில் தமிழக அரசு தளர்வு அறிவித்துள்ளதால், இந்த ஆண்டும் ஓணம் பண்டிகைக்கு பூக்களை அனுப்பி வைக்க முடியும் என நம்பி இருந்தோம்.

ஆனால், கரோனா பரவும் என காரணம்காட்டி கேரள அரசு, தமிழகத்தில் இருந்து பூக்கள் கொள்முதல் செய்வதை தவிர்க்குமாறும், கேரளாவில் கிடைக்கும் பூக்களை வைத்து ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதனால், சத்தியமங்கலத்தில் இருந்து கேரளாவிற்கு பூக்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு, தினசரி பால், காய்கறிகள் கொண்டு செல்லப்படும் நிலையில் பூக்களுக்கு மட்டும் தடை விதித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக கேரள அரசுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்தில் இருந்து பூக்களை அனுப்ப அனுமதி பெற்றுத் தர வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x