Published : 27 Aug 2020 07:33 AM
Last Updated : 27 Aug 2020 07:33 AM

ஆடிப்பட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2,111 ஏக்கர் பரப்பளவில் காய்கறிகள் சாகுபடி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் 2,111 ஏக்கர் பரப்பளவில் காய்கறிகளை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நெல் மட்டுமல்லாமல், காய்கறி, பூக்கள், கரும்பு, மாம்பழ வகைகளை விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், காய்கறி வகைகள் 11,077 ஏக்கர் பரப்பளவிலும், பூவகைகள் 4,332 ஏக்கர் பரப்பளவிலும், பழ வகைகள் 30,358 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனி, ஆடி, ஆவணி மாதங்கள் தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்துக்கு பலன் கிடைக்கும் மாதங்களாகும். ஆகவே, ஆடிப்பட்டத்தில் விதைத்தால், தண்ணீர் பிரச்சினை இருக்காது என்பதால் பலவிதமான விதைகளை ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் விதைப்பது வழக்கம்.

ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் காய்கறி வகைகள், குறைந்தபராமரிப்பிலேயே அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்பதால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடப்பாண்டில், ஆடிப்பட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2,111 ஏக்கர் பரப்பளவில் கத்தரி, வெண்டைக்காய், சுரைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாலங்காடு, வில்லிவாக்கம், பூண்டி, சோழவரம், எல்லாபுரம், திருத்தணி, ஆர்.கே.பேட்டைஉள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் கீரை வகைகள் 741 ஏக்கர் பரப்பளவிலும், வெண்டை 397 ஏக்கர், கத்தரி 345 ஏக்கர், முருங்கை 247 ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் 753 ஏக்கர் பரப்பளவில் காய்கறி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சுமார் 2 மடங்கு கூடுதல் பரப்பளவில் காய்கறி சாகுபடிசெய்யப்படுகிறது. பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், ஊரடங்கு காரணமாக முழுவீச்சில் விவசாய பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதுதான் இதற்கு காரணம் எனவும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x