Published : 04 Sep 2015 02:29 PM
Last Updated : 04 Sep 2015 02:29 PM

மங்களூரு ரயில் விபத்து: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பெரியவடவாடி அருகே இன்று அதிகாலை சென்னை, எழும்பூரிலிருந்து மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த மங்களூர் விரைவு ரயிலின் கடைசி இரு பெட்டிகள் தடம் புரண்டதில் 39 நபர்கள் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

இவர்களில் 35 நபர்கள் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று திரும்பி விட்டனர். காயமடைந்த கோயம்புத்தூர் மாவட்டம், ஒத்தப்பாலத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி பார்வதி, கரூர் மாவட்டம், மூலப்பட்டியைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி சின்னம்மாள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த பெருமாள் மகன் பத்மநாபன் மற்றும் சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் மகன் பரஞ்சோதி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்தச் செய்தி குறித்த தகவல் எனக்கு கிடைக்கப் பெற்றவுடன், எனது உத்தரவின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் ஆகியோர் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்கு தேவையான அவசரக் கால உதவிகளையும், காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கவும் தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

எனது ஆணையின் பேரில், பாதிக்கப்பட்ட பயணிகள் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மாற்று வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்கள் அனைவரும் விரையில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ரயில் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x