

வெளிச்சந்தையில் விலை அதிகமாக இருப்பதால் மத்திய அரசின் ஆதரவு விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இயலாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று எம்.எச்.ஜவாஹிருல்லா, அ.அஸ்லம் பாஷா (மனிதநேய மக்கள் கட்சி), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்) உள்ளிட்டோர் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
தமிழகத்தில் 4 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு சராசரியாக 9 ஆயிரத்து 600 தேங்காய்கள் விளைகின்றன. ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்யும்.
தமிழகத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு இணையத்தின் முகவராக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஆதரவு விலை அரவை கொப்பரை கிலோ ரூ.55.50, பந்து கொப்பரை கிலோ ரூ.58.30 ஆக உள்ளது.
ஆனால், வெளிச்சந்தையில் அரவை கொப்பரை கிலோ ரூ.87.14, பந்து கொப்பரை கிலோ ரூ.97.36 ஆக உள்ளது. மத்திய அரசின் விலையைவிட வெளிச்சந்தையில் அதிக விலை கிடைப்பதால் விவசாயிகளிடமிருந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய இயலாது. வெளிச்சந்தை விலை குறைவாக இருந்தால் விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.