Published : 26 Aug 2020 09:03 PM
Last Updated : 26 Aug 2020 09:03 PM

கணக்கீடு செய்யாமல் கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்து கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே கிராமங்களில் கணக்கீடு செய்யாமலேயே மின் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன்பு காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பிரேம்குமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று காலை கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

அவர்கள் வில்லிசேரி உள்ளிட்ட கிராமங்களில் கணக்கீடு செய்யாமலேயே கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டித்து கோஷங்கள் முழங்கினர். இதில் நகர தலைவர் சண்முகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, சௌந்திரராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பானுவிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி வட்டம் வில்லிசேரி மற்றும் பல கிராமங்களில் ஆகஸ்ட் மாத மின் பயன்பாடு கணக்கீடு செய்யாமலேயே, முந்தைய கணக்கீடுப்படி மின் கட்டணம் செலுத்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

வில்லிசேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிப்ரவரி மாதத்துக்கு பின்னர் கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மின் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

4 மாதங்களுக்கு பின்னர் ஜூன் மாதம் தான் மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்டதில், 4 மாதங்களில் கிராமத்தில் வீடுகளுக்கு அதிகளவு மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வந்தது. அதனை மிகவும் சிரமப்பட்டு மக்கள் செலுத்தினர்.

தற்போது மீண்டும் மின் கணக்கீடு செய்யாமல் ஜூன் மாத செலுத்திய தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதில் அவர்களை மேலும் வாட்டி வதைக்கும் வகையில் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

எனவே, மின் கணக்கீடு செய்யப்படாமல் உள்ள கிராமங்களில் மின் பயன்பாடு கணக்கீடு செய்ய வேண்டும். கரோனா காலம் என்பதால், காலம் தாழ்த்தி மின் கட்டணம் செலுத்துவோருக்கு அபராதம் விதிக்க கூடாது. மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்தும் விலக்க அளிக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட செயற்பொறியாளர் எம்.சகர்பானு, மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படாத கிராமங்கள் குறித்து தகவல் அளிக்கவும். அங்கு உடனடியாக கணக்கீடு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x