

மஞ்சளாறு பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் திருட்டு தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் குழிப்பட்டியைச் சேர்ந்த வெங்கிடுசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சளாறு ஆற்றுப்படுகையில் அதிகளவு விவசாயம் நடைபெறுகிறது. இங்கு தென்னை, நெல் விவசாயம் அதிகம் உள்ளது.
ஆற்றுப்படுகை அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மஞ்சளாறு ஆற்றுப்படுகையில் பல இடங்களில் மணல் திருட்டு நடைபெறுவதால் அணைக்கட்டு உடையும் அபாயமும் உள்ளது.
எனவே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீதும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, மஞ்சளாறு பகுதியில் சட்ட விரோதமாக மணல் திருட்டு நடைபெறுவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 15-க்கு ஒத்திவைத்தது.