காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்: சொந்த நிதியில் ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்

காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்: சொந்த நிதியில் ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள மணக்கரை பகுதியில் கடந்த 18-ம் தேதி குற்றவாளியை பிடிக்க சென்ற போலீஸார் மீது ரவுடி நாட்டு வெடிகுண்டை வீசியதில் கிராமத்தை சேர்ந்த முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார்.

ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளை கிராமத்தில் உள்ள காவலர் சுப்பிரமணியன் இல்லத்துக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், போ.சின்னப்பன் ஆகியோர் இன்று நேரில் சென்று சுப்பிரமணியனின் துணைவியர் புவனேஸ்வரி மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினர்.

அப்போது அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் உதவித் தொகையை சுப்பிரமணியனின் துணைவி புவனேஸ்வரி மற்றும் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் 2017-ம் ஆண்டு காவல் பணியில் சோர்ந்து துடிப்புடன் பணியாற்றி, பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயலாற்றி காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு பாராட்டுகளை பெற்றவர்.

அவரது இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழப்பாகும்.

முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் மரணமடைந்ததை அறிந்தவுடன் தமிழக முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், காவலர் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார்கள்.

விரைவில் நிவாரணத் தொகை மற்றும் அவரது மனைவிக்கு அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துகொள்கிறோம் என்றார் அமைச்சர்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, மாவட்ட ஆறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், மாவட்ட பனைவெல்ல சங்க தலைவர் தாமோதரன், ஏரல் வட்டாட்சியர் அற்புதமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in