Published : 26 Aug 2020 02:31 PM
Last Updated : 26 Aug 2020 02:31 PM

கல்லூரி இறுதித் தேர்வு தவிர பிற பருவப் பாடங்களுக்கான தேர்வுகளுக்கு விலக்களித்து மதிப்பெண்கள்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.26) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா நோய்த்தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி,

முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கும்,

முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்,

இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்

முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்

அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்

இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டுக்குச் செல்ல நான் ஜூலை 23 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தேன். அதன் அடிப்படையில், உயர் கல்வித்துறை ஜூலை 27 அன்று விரிவான வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை வெளியிட்டது.

தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர் கல்வித்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x