Published : 26 Aug 2020 12:55 PM
Last Updated : 26 Aug 2020 12:55 PM

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கும் பென்ஷன் முறையை மாற்றி அமைக்க வேண்டும்; மத்திய நிதியமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்

ரவிக்குமார் எம்.பி: கோப்புப்படம்

சென்னை

ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கும் பென்ஷன் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, ரவிக்குமார் எம்.பி. இன்று (ஆக.26) எழுதிய கடிதம்:

"பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியதாரர்கள் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பென்ஷன் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துமாறு என்னிடம் முறையிட்டுள்ளனர். அதுபோலவே ஓய்வூதியர்களுக்கு இருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு பிரீமியத்தை நல நிதியிலிருந்து செலுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 33 ஆண்டுகளாக வங்கி ஓய்வூதியதார்களின் பென்ஷன் திட்டம் மாற்றியமைக்கப்படாதது வேதனையளிக்கிறது. சில வங்கிகளில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ஒன்றுக்கு வெறும் 175 ரூபாய் வழங்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் திட்டத்தை மாற்றி அமைத்து உயர்த்தி வழங்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, பின்வரும் இரண்டு கோரிக்கைகளைப் பரிவோடு பரிசீலிக்குமாறு தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்:

1. ரிசர்வ் வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு நடைமுறையிலிருக்கும் பென்ஷன் திட்டத்தைப் போலவே பொதுத்துறை வங்கி ஓய்வூதியதாரர்களுடைய பென்ஷன் திட்டத்தையும் மாற்றியமைக்க வேண்டும்.

2. ஓய்வூதியதாரர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்துக்கான பிரீமியத்தை வங்கிகளின் நல நிதியில் இருந்து செலுத்த வேண்டும்".

இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x