

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 28-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.25) வெளியிட்ட அறிக்கை:
"திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 2,548.94 ஏக்கர் பாசன நிலங்களுக்குக் கார் பருவ சாகுபடிக்காக வரும் 28-ம் தேதி முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை விநாடிக்கு 50 கன அடி மிகாமல் தண்ணீர் திறந்து விடவும், அணைக்குக் கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட 2,548.94 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்சத் தேவைக்குக் கூடுதலாக உள்ள நீரினை, வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3,231.97 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம், நீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிடவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள 5,780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.