

இ-பாஸ் நடைமுறையில் தளர்வு காரணமாக, ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் வெளியூர் வாகனங்கள் குவிகின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இ-பாஸ் நடைமுறையில், கடந்த 15-ம் தேதி முதல் அரசு தளர்வை அறிவித்து, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதனால், குமரியில் இருந்து வெளியூர்செல்வோரும், வெளியூர்களில் இருந்து வருவோரும் பெருகியுள்ளனர். ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி வழியாக கடந்த ஒரு வாரமாக அதிகளவில் வாகனங்கள் வந்தவண்ணம் உள்ளன.
தளர்வில்லா முழு ஊரடங்கான நேற்று முன்தினம் சோதனைச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இல்லை. இருசக்கர வாகனங்கள் சில இயங்குவதை காணமுடிந்தது. அதிகாலையில் இருந்து மீண்டும் ஏராளமான வாகனங்கள் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. உள்ளூர் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். நேற்று ஒரே நாளில் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி வழியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் குமரிக்கு வந்தன.