Last Updated : 24 Aug, 2020 07:45 PM

 

Published : 24 Aug 2020 07:45 PM
Last Updated : 24 Aug 2020 07:45 PM

துணை வட்டாட்சியர் பதவி உயர்வு விதிகளை 4 வாரத்தில் திருத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு

மதுரை

தமிழகத்தில் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு தொடர்பாக பணி விதிகளில் உரிய திருத்தத்தை 4 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும். தவறினால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டையில் வருவாய்த்துறையில் உதவியாளர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு தற்காலிகமாக துணை வட்டாட்சியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிக பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் தற்காலிக பதவி உயர்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், துணை வட்டாட்சியர் பதவி உயர்வு தொடர்பாக வருவாய்த்துறை பணி விதிகளில் உரிய திருத்தம் கொண்டுவர உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அந்த திருத்ததின் அடிப்படையில் பணி மூப்பு பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்க அமர்வு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இதுவரை விதிகளில் திருத்தம் செய்யவில்லை. இதனால் தற்காலிக துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தற்காலிக துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கியது செல்லும். தற்காலிக பதவி உயர்வு பட்டியலை நிறுத்தி வைத்தும், ரத்து செய்தும் மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

துணை வட்டாட்சியர் பதவி உயர்வு தொடர்பாக பணி விதிகளில் உரிய திருத்தம் கொண்டு வர உயர் நீதிமன்ற அமர்வு 30.8.2019-ல் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை 4 வார காலத்தில் நிறைவேற்றுவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்தறை கூடுதல் தலைமை செயலர் 10.8.2020-ல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கால அவகாசம் கேட்காமல் பணி விதிகளில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இதில் தவறினால் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அமர்வுக்கு பரிந்துரைக்கப்படும். தற்காலிக பதவி உயர்வு அடிப்படையில் துணை வட்டாட்சியராக பணிபுரிபவர்கள் நிரந்தர பதவி உயர்வுக்கு பின்னால் பதவி உயர்வு பறிக்கப்பட்டால் பழைய பதவிக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு நீிதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x