Published : 24 Aug 2020 05:37 PM
Last Updated : 24 Aug 2020 05:37 PM

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பு:

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்குப் விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி ,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.

கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

புள்ளம்பாடி (திருச்சி) 12 செ.மீ, கல்லக்குடி (திருச்சி), திருத்தணி (திருவள்ளூர்) தலா 11 செ.மீ, வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பெரம்பலூர், அம்முடி (வேலூர்) தலா 10 செ.மீ, கரூர் (தர்மபுரி), புவனகிரி (கடலூர் ) தலா 9 செ.மீ, சோளிங்கர் (ராணிப்பேட்டை ), பொண்ணை (வேலூர்) தலா 8 செ.மீ, தம்மம்பட்டி (சேலம்), அரியலூர் (அரியலூர்), திருப்பட்டூர் (திருப்பத்தூர்) , ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர் ) தலா 7 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 28 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன் அறிவிப்பு :

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்டு 25 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.3 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x